கோவை : கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கோவையில் மேலும் 5 பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின்போது சம்பந்தப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் நிதி வசூல், பணப் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் நிதி வசூல் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.





