கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் அரசு பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பனூர் செல்லும் அரசு நகரப் பேருந்து எண் 21, நீண்ட ஆண்டுகளாக அண்ணா நகர் பகுதிக்குள் செல்லாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பயனாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து இன்று முதல் அண்ணா நகர் பகுதிக்குள் இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பேருந்து வருகையை முன்னிட்டு மக்கள் மலர் தூவி வரவேற்று, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது சமூக நீதி முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


