கோவை: கோவையில் காரை அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்ட பிறகு, அதே காரை மீட்டுத் தருமாறு மிரட்டி வாலிபரை சிறைபிடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடகிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கமலேஷ் (27), தற்போது செல்வபுரம் ஐயுபிபி காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் கோவை மணியகாரம்பாளையம் ரங்கநாதர் வீதியைச் சேர்ந்த ‘மெடிக்கல்’ சுரேஷ் (49) என்பவர் தனது காரை அடகு வைக்க விரும்புவதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்படி, கடந்த ஜூன் 12-ம் தேதி காலை மருதுபாண்டி என்பவருடன் வந்த சுரேஷ், தனது காரை கமலேஷிடம் ஒப்படைத்துள்ளார். அதற்கு ஈடாக ரூ.2 லட்சம் வழங்குவதாக கமலேஷ் ஒப்புக்கொண்டார்.
முதற்கட்டமாக, மருதுபாண்டியின் வங்கிக் கணக்கிற்கு ஜி-பே மூலம் ரூ.60 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
பின்னர் மீதித் தொகையை வழங்குவதற்காக கமலேஷ், சுரேஷ் மற்றும் அவரது நண்பரான திருப்பூர் காங்கயம் மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (25) ஆகியோருடன் ஒட்டன்சத்திரம் சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பர் அஜித் குமார் மூலம் மீதித் தொகையான ரூ.1.30 லட்சத்தை ரொக்கமாக சுரேஷிடம் வழங்கியுள்ளார். அதன்பின் காரின் சாவியையும் பெற்றுக்கொண்டு மற்றொரு வாகனத்தில் கோவை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சுரேஷ், கமலேஷை தொடர்புகொண்டு, தான் கொடுத்த கார் காணாமல் போய்விட்டதாகவும், யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கமலேஷ், இதுகுறித்து விசாரிக்க மணியகாரம்பாளையத்தில் உள்ள சுரேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு காரைப் பற்றி கேட்டபோது, சுரேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கமலேஷை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், காரை மீட்டுத் தர வேண்டும் அல்லது காரை அடகு வைப்பதற்காக பெற்ற பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, சுரேஷின் உத்தரவின் பேரில் ரஞ்சித், கமலேஷை அங்கிருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்து வைத்து சிறைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அங்கிருந்து தப்பிய கமலேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கமலேஷை மிரட்டி சிறைபிடித்தது உறுதியானதைத் தொடர்ந்து ‘மெடிக்கல்’ சுரேஷ் (49) மற்றும் ரஞ்சித் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரை அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதே காரை காரணம் காட்டி பணத்தையும் திருப்பிக் கேட்டு வாலிபரை சிறைபிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


