கோவை: கோவையில் சுமார் 3,500 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அவசர நேரத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம் என்றும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கவும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் 3,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில்,
“ஆன்லைனில் தற்போது தாராளமாக தடை செய்யப்பட்ட மருந்துகள் கிடைத்து வருகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 2,000 கடைகள் உட்பட மொத்தம் 3,500க்கும் மேற்பட்ட கடைகள் கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர நேரத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம். அல்லது ஒவ்வொரு மருந்துக் கடை முன்பும் ஒட்டியுள்ள நோட்டீஸில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.



