கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 39வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் மற்றும் மோப்பநாய் பரிதவித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கோர்ட், ஆர்டிஓ., அலுவலகம், தபால் நிலையங்கள், தனியார் கல்லூரி உட்பட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதில் கலெக்டர் அலுவலகத்திற்கு வாரந்தோறும் திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதில் மர்ம நபர் தவறுவது இல்லை. அதேபோல, தமிழகத்தில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியை சேர்த்து வைக்க வேண்டும், இல்லை என்றால் 13 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்து இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கலெக்டர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் 5 இடங்களில் மைக்ரோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதற உள்ளது என இருந்தது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகம் விரைந்து சென்று கட்டிடத்தில் உள்ள அனைத்து அறைகள், வாகன நிறுத்தம், காலி இடங்களில் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் 39 வது முறையாக புரளி என்பது தெரியவந்தது. காலை நேரம் என்பதால் அலுவலகம் வெறிச்சோடி இருந்ததால், எந்த ஒரு பதட்டமும் ஏற்படவில்லை.



