கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (20). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பரான ஜபருல்லா (24) என்பவருடன் நேற்று பைக்கில் குனியமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜபருல்லா பைக்கை ஓட்டிய நிலையில், சம்சுதீன் பின்னால் அமர்ந்திருந்தார்.
ஆத்துப்பாலம் அருகே வந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சம்சுதீன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்சுதீன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த ஜபருல்லாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



