கோவை: கோவையில் தொழில் நஷ்டம் மற்றும் மன உளைச்சலால் தொழிலதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி முத்துக்குமார் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (43). இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பொருளாதார சிக்கலில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.
Read news :கோவையில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…
இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான ரகுநாதன், கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று காலை அவரது மனைவி அபிநயா (34) மற்றும் மாமனார் வெளியே சென்றிருந்தனர். பின்னர் மதியம் மாமனார் வீட்டிற்கு திரும்பியபோது, அறைக்குள் ரகுநாதன் பெல்ட் மூலம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகுநாதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


