கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் We The Leader இயக்கத்தின்
உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வி தி லீடர் இயக்கத்தின் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாக ஆரம்பித்துள்ள மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பாக மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்த இயக்கத்தைச் சேர்ந்த பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா, முன்னிலை வகித்தனர். சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார்.
இதில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவேண்டும், சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்களை தவிர்க்கவேண்டும். பாஜவிற்கு எதிரான போக்கை கடைபிடிக்ககூடாது. பொதுமக்களைச் சந்தித்து இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விளக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்டப் பொருளாளர் பிரபு,செயலாளர் சாந்தி, பிரவீன், விஜயகுமார், மாரிசாமி, எல்.ஐ.சி.பாலு, கூடலூர் நகராட்சிக் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், கிருபாகரன், வீரபாண்டி சுரேஷ், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர், மேட்டுப்பாளையம் மண்டல்களின் முன்னாள் தலைவர்கள் மகேந்திரன், மகேந்திரராஜ், சரவணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


