கோவை: கோவையில் மோதிக்கொண்ட திமுக அதிமுகவினரை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்துள்ளனர்.
கோவை மாநகர் ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட திமுக , அதிமுக கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் கோவை மாநகர் ராமநாதபுரம் 80 அடி சாலையில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுகவினரை பிடித்து அதிமுகவினர் தாக்கி உள்ளனர்.
மேலும் திமுகவினரின் கார் கண்ணாடியையும் உடைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் மூலம் திமுகவினர் வந்த வாகனத்தில் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் வரையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது கரூரை சேர்ந்த திமுகவினரின் வாகனம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து பணத்துடன் திமுகவினர் 6 பேரை போலீசார் விசாரணைக்காக இராமநாதபுரம் காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
அதே சமயம் திமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் காவல் நிலையம் முன்பாக குவிந்ததால் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் காவல் நிலையம் முன்பே இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடந்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். தொடர்ந்து இராமநாதபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


