கோவை: வானதி சீனிவாசனுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்க வேண்டுமென சுரேஷ் கோபி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய இணை அமைச்சரும், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள முத்தப்பசாமி கோவிலுக்குச் சென்ற சுரேஷ் கோபி மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர், அங்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர்.
அங்குத் திரண்டு இருந்த ஏராளமான மலையாளி மக்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, வானதி சீனிவாசன் தனது சகோதரியாகக் குறிப்பிட்டு, அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை பேசினார்.
முத்தப்பசாமி கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, வடவள்ளி மகாராணி அவென்யூ, காட்டு விநாயகர் கோவில், டாட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் சுரேஷ் கோபி ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
வானதி சீனிவாசன் கடந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தெற்கு தொகுதியில் சிறப்பாக பணியாற்றினார். பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதே போல வடக்கு சட்டமன்ற தொகுதியிலும் அவரை தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் . வானதி சீனிவாசனை போன்ற பல சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.


