கோவை: பெட்ரோல் டீசல் கேன்களுடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய உழவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல்களை கேன்களில் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பெரிய பெரிய கேன்களுடனும் உழவு கருவிகளுடனும் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் முக்கிய எரிபொருளாக உள்ள நிலையில் சில கருவிகளை நேரடியாக பெட்ரோல் பங்க்குகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. எனவே விவசாயிகள் பெரிய பெரிய கேன்களில் எரிபொருளை நிரப்பி வந்து அந்த உழவு கருவிகளில் ஊற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க்குகளில் விவசாயிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் கேன்களில் வழங்கி வந்த நிலையில் அண்மையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கருவிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல்களை ஊற்ற முடியாததால் அதனை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாகவும் எனவே மத்திய மாநில அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி பெட்ரோல் பங்குகளில் விவசாய உற்பத்தி மற்றும் உளவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கேன்களில் வழங்கிட வலியுறுத்தியும் சிறப்பு அனுமதி இதற்காக கொடுக்க வேண்டும் அல்லது நேரடி விநியாகத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பெட்ரோல் டீசல் கேன்களை சுமந்து கொண்டும் சிறிய ரக உழவு கருவிகளை எடுத்து வந்தும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயம் செய்வதற்கு பெரும் சிரமம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு போராடி வருவதாகவும் தற்பொழுது விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகளை பெட்ரோல் பங்குகளுக்கு எடுத்து செல்லக்கூடாது அப்படி எடுத்த சென்றால் பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என்று ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளதை குறிபிட்ட அவர் ஏற்கனவே விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளான நிலையில் இப்பொழுது இந்த கருவிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழுப்பினார்.
இந்த உழவுக் கருவிகளுக்காக கேன்களில் பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என்று அறிவித்திருப்பதும் அப்படி வழங்கினால் அந்தப் பெட்ரோல் பங்க் உரிமை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கிறார்கள் எனவே அதனை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுப்பதை தவிர்த்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் விவசாய அட்டை வைத்துள்ளவர்களுக்கு கண்களில் பெட்ரோல் டீசலை வழங்கினால் தான் விவசாயம் செய்ய முடியும் என்று தெரிவித்தார். இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



