கோவை: பீகாரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்தனர்.
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்குள் மூன்று பேர் இருந்தனர். உடனே போலீசார் அந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்ததால், மூன்று பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே போலீசார் அந்த ஆட்டோவில் சோதனை செய்தனர். அதில் பல மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவில் இருந்த 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அந்த மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த ரோகித், கார்த்திக் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது, கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
அத்துடன் போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது;
கைதான மூன்று பேரும் பீகாருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி, அதை ரயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்துள்ளனர்.
பின்னர் பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு கடத்த முடிவு செய்து ஆட்டோவில் பொள்ளாச்சியை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது சிக்கிக் கொண்டனர். இந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா கடத்திய வழக்கு உள்ளது.
இதில் முக்கிய நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். எனவே அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் தெரிகிறது.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


