கோவை: கோவை உக்கடத்தில் மேம்பாலத்தின் கீழ் தூங்கியவரின் மீது லாரி ஏறி இறங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்தின் கீழே உள்ள மத்திய தடுப்புச்சுவரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரி, சாலையில் விழுந்து கிடந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதில் அவரது உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குப் பின்னர் லாரி நிற்காமல் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காய்கறி லாரி மற்றும் அதன் ஓட்டுநரை கண்டறியும் பணியில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


