கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது “நிதி வரவில்லை” என தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, இத்திட்டத்தில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
இதுகுறித்து தன்னார்வலர்கள் வனிதா மற்றும் கோகிலா கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தினமும் இரண்டு மணி நேர பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும், நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் மாதம் சுமார் ரூ.5,500 வரை வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் “நிதி இல்லை” என கூறி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தற்போதைய ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.18,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



