கோவை: கோவை மாநகராட்சியில் தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக தலை மற்றும் கைகளில் கட்டுடன் வந்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் பகுதியை சுற்றித் தெருநாய்கள் பிரச்சனை அதிகமாக உள்ளதாக கூறி குழந்தைகளுக்கு மாதிரி கட்டுகளை கட்டி கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தெரு நாய்களால் குழந்தைகள் முதியவர்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் SDPI கட்சியினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்த அவர்கள் குழந்தைகளுக்கு தலை மற்றும் கைகளில் மாதிரி காய கட்டுகளை போட்டுவிட்டபடி வந்து மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் அந்தப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குழந்தைகள் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். குறிப்பாக தெருநாய்களால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் தற்பொழுது வரை உரிய நடவடிக்கை இல்லை என்று தெரிவித்த அவர்கள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களை பிடிப்பதற்கு உரிய நேரத்தில் வராமல் நாய்கள் அதிகமாக இல்லாத நேரமாக வந்து சென்று விடுவதாகவும் கூறினர்.
மேலும் நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம் என்று கூறினாலும் சில மாதங்களிலேயே அந்த நாய்கள் குட்டிகளை ஈன்று விடுவதாகவும் அதிகாரிகள் ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினர்.



