கோவை: பாஜக உடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது எனவும், மத்திய அரசை எதிர்த்துக்கொண்டு தேவையற்ற எதிர்ப்பை விஜய் வாங்கிக் கொள்ள மாட்டார் என்பதே தனது நம்பிக்கை எனவும் பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியும் பிரபல நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்கள் என்பதே நல்ல விஷயம். அதில் குறைகள் ஏதேனும் இருந்தாலும் இது புதிய ஆட்சி எனவும் குறிப்பிட்டார்.
சென்னை திருவொற்றியூரில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டாலும், அங்குள்ள தெருக்களையே குடிமக்கள் கடையாக மாற்றியதாகவும், அனைத்திற்கும் அரசையே எதிர்பார்க்காமல் மக்களையும் மாற்ற வேண்டும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களை மாற்றிவிட்டதாகவும் கூறினார். விஜய் ஆட்சியில் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான செயல்பாட்டிற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதேபோல், ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவது கிடையாது என்றும், கடைசி கட்டத்தில் இருப்பவர்களை மாற்றுவதற்கான கட்டமைப்பு விஜய்க்கு இப்போதைக்கு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியதுடன், அனைவரும் புதியவர்கள் என்றும், பதவியேற்க வரும் பொழுதுகூட வெற்றிச் சான்றிதழை அமைச்சர் கீர்த்தனா மறந்துவிட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, திமுக தோற்றாலும் நடப்பது திமுக ஆட்சிதான் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று கூறுவதைப் போல் அதனை பார்ப்பதாகவும், தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதயநிதி கதறுவதை நாம் கேட்டு பார்த்து ரசிக்கலாம் என்றும், அதற்காகவே நான் விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
தவெக எதிர்பாராத வெற்றியை பெற்றிருப்பதாகவும், அந்த வெற்றியை பறிகொடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களிடம் செல்வது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் என்றும், அதிமுக அதிகாரத்திற்கு வரும்போது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவை தேடி ஓடி வருவார்கள் என்றும் கூறினார்.
இதேபோல், தற்போது தவெக ட்ரெண்டிங்கில் இருப்பதால் அந்தக் கட்சிக்கு அனைவரும் வருகிறார்கள். அதேவேளையில் தவெக-விற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை விட்டு சென்று விடுவார்கள் என்பதால், அரசியலில் வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும், அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பதில்தான் தவெக-வின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றும் கூறினார்.
பாஜக கொள்கை எதிரி என கூறும் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, “தமிழக மக்கள் நலனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். அதனை வேண்டாம் என்கிறாரா? லஞ்சம், ஊழல் இல்லாத அரசை வேண்டும் என்கிறோம். அதை வேண்டாம் என்கிறாரா?” என்றும் கேள்வி எழுப்பியதுடன், மீண்டும் மீண்டும் ‘மதவாதம்’ என்ற திமுகவின் பல்லவியை வைத்து தனது கொள்கையை சொல்லி வருகிறார் விஜய் என்றும் சாடினார்.
தற்போது முள்ளிவாய்க்கால் என்று சொல்லி, தனது ஆட்சியில் காங்கிரசை நம்பி விஜய் இருப்பதாகவும், அப்படி இருக்கும் போது அவருக்கு என்ன கொள்கை இருக்க முடியும் என்றும், பாஜக உடன் இணக்கமாக செல்வதே அவருக்கு நல்லது என்றும், மத்திய அரசை எதிர்த்துக்கொண்டு தேவையற்ற எதிர்ப்பை விஜய் வாங்கிக் கொள்ள மாட்டார் என்பதே தனது நம்பிக்கை என்றும் கூறினார்.



