Coimbatore crime news: மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்து மாமியாரையும் கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் சரசு (55). அவருக்கு மகனும், பகவதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 22 வருடங்களுக்கு முன்பு பகவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பழனிசாமி (43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பகவதிக்கும் பழனிசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து பகவதி திருமணமான ஒரு வருடத்தில் பழனிசாமியை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் பழனிசாமியிடம், பகவதி மற்றும் அவரது குடும்பத்தினர் பேசாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி, மாமியார் சரசு வீட்டிற்கு வந்து மனைவி பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
மேலும், ஆத்திரம் அடைந்த பழனிசாமி மாமியார் சரசுவை சரமாரியாக தாக்கி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். அவரின் சத்தத்தை கேட்டு பகவதி ஓடி வந்து பழனிசாமியை தடுத்தார்.
அப்போது பழனிசாமி, அவரையும் கத்தியால் குத்தினார். பின்னர் அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சரசு கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பழனிசாமியை தேடி வருகின்றனர்.

