கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில்,
எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து களம் காண்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இது தவிர சீமான் வழக்கம் போல் தனித்து போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் காண்கிறது.
இன்று மாலை அறிவிப்பு

இது தமிழகக் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகம் 4 முனை போட்டியைச் சந்திக்க உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால், அரசு புதிய அறிவிப்புகள், நலத்திட்ட தொடக்க விழாக்கள், அரசியல் விளம்பரங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளன.
இன்றைய அறிவிப்பை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

