கோவை: அதிமுக கூட்டணியில் கோவையில் ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமுமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமுமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, அதிமுக சார்பில் களமிறங்கும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்றக் கொறடாவுமான எஸ்.பி. வேலுமணிக்கு தொண்டாமுத்தூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை தொகுதிகள்
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், நடப்பு தேர்தலில் கோவையில் அதிமுக 9 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக, கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிமுக இறுதி செய்துள்ளது.
இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுவாரா அல்லது பாஜக நிர்வாகிகளில் வேறு யாரேனும் களம் காண உள்ளார்களா என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இருந்தாலும், தொகுதி மாறி பாஜக போட்டியிடுவது, ஏற்கனவே தெற்கு தொகுதியில் உள்ள அதிருப்திகளை ஈடுகட்டவும், புதிய தொகுதியில் கட்சியை வளர்க்கவும் உதவும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

