கோவை:கோவை தெற்கு தொகுதியில் ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மர்ம கும்பலை போலீசார் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வாக்காளர்களை வீடுவீடாக சந்தித்து ஓட்டு கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே சில கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பணம் மற்றும் பட்டுவாடாவை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு, சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சிலர் கூடி நின்றிருந்ததை பார்த்த அதிகாரிகள் அங்கு சென்றனர். பறக்கும் படை அதிகாரிகளை பார்த்த அங்கு நின்ற கும்பல், அவர்கள் கைகளில் வைத்திருந்த சீட்டுகளை வீசி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, அவை திமுக சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரூ.8000 மதிப்புள்ள மாதிரி கூப்பன்கள் அடங்கிய புத்தகங்கள் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாதிரி கூப்பன் புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த புத்தகத்தில் 46 கூப்பன்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படை அதிகாரி அம்சவேணி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரி அம்சவேணி அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி சப் இன்ஸ்பெக்டர் தீபா அடையாளம் தெரியாத கும்பல் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறார்.


