கோவை: சொன்னதைச் செய்யாவிட்டால் குறிப்பிட்ட நாளில் ராஜினாமா செய்வேன் என செஞ்சேரிமலை முருகன் முன்பாக நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு நாம் தமிழர் வேட்பாளர் சபதம் ஏற்று கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் நாம் தமிழர் வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சூ.ராஜசேகரன், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று செஞ்சேரிமலை முருகன் முன்பாக நூறு ரூபாய் முத்திரைத்தாளில் உறுதிமொழி ஏற்று, செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளாரிடம் அந்தப் பத்திரத்தை சமர்ப்பித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்சார வசதி, தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைத்தல், பாலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுதல், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் மற்றும் ஆனைமலை – நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அவர் அந்தப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் அதில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ராஜசேகரன், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் அதிகாரம் செய்பவராக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் தேவைகளை உணர்ந்தவராகவும், அவற்றிற்குத் தீர்வு காண்பவராகவும் இருக்க வேண்டும். இதுவே எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் கொள்கையாகும். மக்களிடம் உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் செயல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளோம். வெற்றி பெற்றவுடன் இவை அனைத்தும் உடனடியாகச் செயல்படுத்தப்படும், தவறும் பட்சத்தில் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.


