கோவை: காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.
கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே கடந்த 8-ஆம் தேதி மின்கம்பியை தொட்ட காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மின்வாரியம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வன எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் சுமார் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு வன எல்லைப் பகுதிகளில் உள்ள மின்கம்பிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பணிகள் தொடங்கும்” என்றனர்.
அதன்படி, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தப்பட உள்ளன. இந்த உரைகள் ஒன்றோடு ஒன்று இணையும் வகையில் அமைக்கப்படுவதால், வனவிலங்குகள் மின்கம்பிகளை தொட்டாலும் மின்சாரம் தாக்குவதை தடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு யானை வழித்தடத்தில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை அடிப்படையில் இந்த பாதுகாப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள துணை வழித்தடங்களிலும் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், யானைகள் செல்லும் பாதைகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. யானைகள் மின்கம்பிகளை தொட்டவுடன் தானாக மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் மின்விபத்தில் சிக்காமல் இருக்க மின்மாற்றிகளை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கோவை வன எல்லைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



