கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடப்பு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளருக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள் நேற்ரு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், தங்கமணி, அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட 26 நிர்வாகிகளின் அ.தி.மு.க., கட்சிப் பதவியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். மேலும், 17 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
Read news: எஸ்.பி.வேலுமணியின் கட்சிப் பதவி பறிப்பு!
கோவையைப் பொறுத்தவரையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பதவி வகித்து வந்த எஸ்.பி.வேலுமணியின் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான செ.ம.வேலுச்சாமி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை ஓசூர் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு முக்கிய நிர்வாகிகள் வராத போதிலும், தொண்டர்கள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
புதிய நிர்வாகியான செ.ம.வேலுசாமி இன்னும் கட்சி அலுவலகத்திற்கு வராத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அக்கட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



