சென்னை: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவந்த் இணையும் புதிய தமிழ் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. தந்தை – மகன் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
டிராமா கம்பெனி
தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ. பாலமுருகன் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனமான “டிராமா கம்பெனி” தனது முதல் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்த தமிழ் திரைப்படம் “தந்தை – மகன் உறவை” மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படம், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமனின் புதிய படைப்பாற்றலுடன் உருவாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகர்கள் யார்?
மேலும், இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இயக்குநராக “டூரிஸ்ட் ஃபேமிலி” என்ற பிளாக்பஸ்டர் வெற்றியையும், நடிகராக “வித் லவ்” திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த திறமையான இளம் நடிகர் அபிஷன் ஜீவந்த் ஆகிய இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷிவானி நாகராம் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
தொழில்நுட்பக் குழுவில் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராகவும், பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் படத்தொகுப்பாளராகவும், சுவாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
படத்தின் தொடக்க விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கலைப்புலி எஸ். தாணு, சி. பிரேம்குமார், மணிகண்டன், கென் கருணாஸ், ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன் மற்றும் கருப்பையா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“ஒரு புதிய கனவு தொடங்குகிறது, ஒரு புதிய பயணம் விரிகிறது”

படத்தின் தொடக்க விழா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம், “ஒரு புதிய கனவு தொடங்குகிறது, ஒரு புதிய பயணம் விரிகிறது” என்ற வாசகத்துடன் தனது முதல் தயாரிப்பு நல்ல நேரத்தில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. இந்த விழாவில் நடிகர் மணிகண்டன் முதல் கிளாப்பை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.



Very very very very important news….