கோவை:கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதனை முன்னிட்டு தேசிய சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி ஒவ்வொரு பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் உக்கடம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்ததாக ஜூன் 8 முதல் 12 வரை ஒன்றிய அரசின் சாதனைகளை மக்களிடம் பூத் வாரியாக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெறவுள்ளன. பின்னர் ஜூன் 12 முதல் 20 வரை சாதனை கண்காட்சிகள் மற்றும் முகாம்கள் நடத்தப்படும். தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி தேசிய யோகா தினத்தை முன்னிட்டு யோகா முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்ணாமலை தொடங்கிய புதிய அரசியல் நகர்வுகள் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “கோவை மாநகர் மாவட்டத்தில் யாரும் அவருடன் செல்லவில்லை. உறுப்பினர் சேர்க்கை குறித்த தகவல்களை நாங்கள் இணையதளம் மூலம் தான் அறிந்தோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், அண்ணாமலை கடந்த காலத்தில் பாஜகவில் சிறப்பாக செயல்பட்டவர் என்றும், அவரது விலகலால் கட்சிக்கு பெரிய பின்னடைவு இல்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிகளில் சிறிய தொய்வு ஏற்படுவது இயல்பானது, அது விரைவில் சரியாகும் என்றும் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக முழுமையாக தயாராகி வருவதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் பாஜக வலுவாக செயல்பட்டு வருவதாகவும், மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்ணாமலை விலகல் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் இல்லை என்றும், மேல்மட்ட தலைவர்களுக்கு இது முன்பே தெரிந்திருக்கலாம் என்றும், ஆனால் மாவட்ட நிர்வாகிகளுக்கு நேற்று தான் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


