கோவை: கோவையில் வரும் நாட்களில் வெப்பநிலை குறையக்கூடும் என்று வானிலை ஆர்வலர் சுஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே அச்சப்படுகின்றனர்.
இதுமட்டுமல்லாது புழுக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் மட்டுமல்லாது, இரவிலும் புழுக்கம் அதிகரித்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
மக்கள் ஏக்கம்
வெயிலின் தாக்கம் குறையாதா? கோவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாதா? என்று கோவை மக்கள் ஏங்கியிருக்கும் இந்த சூழலில், வெப்பம் குறைய உள்ளதாக வானிலை ஆர்வலர் சுஜய் இனிப்பான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் News Clouds Coimbatore-இடம் கூறியதாவது:-

கோவையில் கோடை மழை மற்றும் காற்றின் மாறுதல் காரணமாக வரும் நாட்களில் வெப்பநிலை குறையக்கூடும். காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால் புழுக்கம் அதிகமாக இருக்கும். மழை பெய்தால் மட்டுமே இந்த புழுக்கம் குறையும்.
கோவை மாவட்டத்தில் நாளை முதல் அங்காங்கே மழைப்பொழிவு தொடங்க உள்ளது. இந்த வார இறுதியில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும். இந்த மழை நிச்சயமாக சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். மாவட்டத்தில் பரவலாக மழை இருக்கும்.
கோவையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் காற்று மாறுதல் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். அதற்கு அடுத்த வரும் நாட்களில், காற்றின் தன்மையைப் பொறுத்தே மழை குறித்த கணிப்புகளை கூற முடியும்.
இவ்வாறு சுஜய் தெரிவித்துள்ளார்.


