கோவை: நெகமம் அருகே தோட்டப் பகுதியில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் நெகமம் அடுத்த என்.சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது தோட்டம் அருகே மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Click here to Read news: கோவில்மேடு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் போராட்டம்!
தகவலின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், கோமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனன் மற்றும் தடய அறிவியல் நிபுணர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கிடந்த மனித எலும்புக்கூடுகளை போலீசார் கைப்பற்றி, மேலான பரிசோதனைக்காக கோவை சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு உயிரிழந்தார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



