கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிஞ்சி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் தனது பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த 11-ம் தேதி இரவு சாமி ஊர்வலம் விநாயகர் கோயில் அருகே சென்றபோது, மேளம் வாசித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மேளம் இல்லாமல் ஊர்வலத்தை தொடர விழா அமைப்பாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல், மேளம் இல்லாமல் சாமி ஊர்வலம் செல்லக்கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை முருகன் தட்டிக்கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஒருவர் கையில் அணிந்திருந்த காப்பால் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
முருகனை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர் கணேசனையும் செங்கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கணேசனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.


