கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில், அவருக்கு உதவிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித் குமார் (35) என்பவர், கார் விற்பனை பெயரில் பலரிடம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இருவரிடம் கார் விற்பனை செய்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாலை மருத்துவமனை வார்டிலிருந்து அஜித் குமார் தப்பியோடினார். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைதி தப்பிக்க உதவியதாக கூறப்படும் கார் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் கைதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் அலட்சியம் ஏற்பட்டதாக கூறி 2 ஆயுதப்படை போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


