விஜய் 108 இடங்களில் வென்ற நிலையில், அவரை முதலமைச்சராக விடாமல் ஆளுநர் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலமைச்சராவாரா விஜய்?
2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது. ஆனால் 108 இடங்களை வென்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி இழுத்தடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
கமல் ஆதரவுக் குரல்
என் சகோதரர் திரு. ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆட்சி வேண்டாம்
மறுபுறம் நடிகர் விஷால், 2017/18-ல் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் முக்கியமாக கர்நாடகாவில் நடந்த அதே சூழ்நிலையைப் போலத்தான் இது இருக்கிறது. அப்போது அரசு அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் சட்டப்பேரவையில் “ஃப்ளோர் டெஸ்ட்” மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லப்பட்டது.
அப்படியிருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஏன் #தளபதிவிஜய் அவர்களுக்கு அதே வாய்ப்பை வழங்க தயங்குகிறார்? மக்களின் தீர்ப்புக்கு மரியாதை எங்கே???
233 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்க தயாராக இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மக்களாட்சி ஆதரவுடன், பெரும்பான்மை இடங்களை வென்றுள்ள #TVK அரசு அமைக்க வேண்டும்; ஆளுநர் ஆட்சி வேண்டாம்.

இந்த அடிப்படை அரசியல் உரிமைகள் அரசியல்வாதிகளுக்கே மட்டும் தெரிந்தவை அல்ல. தமிழ்நாட்டின் மிகப் பெரிய சக்தியான மக்களுக்கும் தெரியும்.
அன்புள்ள விஜய், நீங்கள் அரசு அமைப்பீர்கள். ஒரு வாக்காளராக நான் அதைப் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
விஜய்க்கு உரிமையை கொடுங்க
விஜய்யின் ஆஸ்தான வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ், ஆளுநரின் நடத்தை மிகவும் அருவருப்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்…

ஆனால் விஜய் மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளார். சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


