கோவை : கோவையில் சாலையோரங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற்ற 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்கள், ஓட்டல்கள், பொழுது போக்கு மையங்கள் முன்பு முதியவர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில இடங்களில் மக்கள் சங்கடங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதில் சில யாசகர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனை தடுக்க கோவை மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், சிறப்பு சிறார் காவல் பிரிவு, மனித கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தைகள் உதவி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது துடியலூர் பேருந்து நிலையத்தில் 2 பெண்கள் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பிங்க் பேட்ரோல் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தைகளுடன் யாசகம் கேட்டு கொண்டு இருந்த 2 பெண்களையும் மீட்டனர்.
அவர்களிடம் விசாரித்த போது ஒருவர் மதுரை சக்திமங்கலம் பகுதியை சேர்ந்த பண்ணாரி (20) மற்றும் அவரது 11 வயது மகன் என்பதும், மற்றொரு பெண் மகாராஷ்டிரா அமராவதியை சேர்ந்த புஷ்பக்கிரன் போஸ்ட்லே மற்றும் அவரது 8 வயது மகள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிங்க் பேட்ரோல் மூலம் போலீசார் அழைத்து சென்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாநகரில் யாசகம் பெறுபவர்களையும், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களையும் மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி குழந்தைகளுடன் யாசகம் பெருபவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
துடியலூர் பகுதியிரல் குழந்தைகளுடன் யாசகம் பெற்று கொண்டு இருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்து, எச்சரித்து அறிவுரை கூறப்பட்டது. பின்னர் அவர்கள் பிங்க் பேட்ரோல் மூலம் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாநகரம் முழுவதும் ரோந்து சென்று குழந்தைகளை வைத்து யாசகம் பெறுபவர்களை தடுக்க நவடிக்கை எடுத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

