கோவை: மகளிர் 33% இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றாத ஒன்றிய அரசு பெண்களின் நம்பிக்கையை துரோகம் செய்துள்ளதாக மகிளா காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜாஸ்மின் நிர்மல் கூறியதாவது:
இந்திய பெண்கள் நீண்ட காலமாக அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக காத்திருக்கின்றனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, பெண்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த செயலாகும்.
பெண்களின் வாக்குகளை நாடும் அரசியல் கட்சிகள், பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் ஆட்சியாளர்கள், பெண்களுக்கு உரிய அதிகாரப் பங்கீடு வழங்க வேண்டிய நேரத்தில் பின்னடைவு காட்டியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண்கள் இன்று கல்வி, மருத்துவம், தொழில், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். ஆனால், அரசியல் அதிகார அமைப்புகளில் பெண்களுக்கு இன்னும் சமமான வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு கேள்விக்குறியாகும். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு தோல்வி கண்டுள்ளது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய தலைவர் அல்கா லம்பா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, அனைத்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஜனநாயக போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் மகிளா காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றி, விரைவாக அமல்படுத்த வேண்டும். இது பெண்களுக்கு வழங்கப்படும் அரசியல் உரிமை. இந்த விவகாரத்தில் மகிளா காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.


