முதலமைச்சரானதும் விஜய் புதிய பாதையில் பயணித்து வரும் நிலையில், தற்போது புதிய வீட்டில் குடியேற உள்ளார்.
முதல்வர் விஜய் வெற்றி
நடிகரும், தவெக தலைவருமான விஜய், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றார்.

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் ஆதரவை பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார்.
எளிமையின் அடையாளம்
இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்றதும், விஜய் எளிமையாக மக்கள் பணியாற்றி வருகிறார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை அவர்களது வீட்டிற்கே சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தது வரவேற்பை பெற்றது.

மேலும் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஆலோசனையை கேட்டு பல முடிவுகளையும் எடுத்து வருவதாக செய்திகளும் வெளியானது. ஜோசியருக்கு அரசு பதவி வழங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளை குறிப்பாக எடுத்து, நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை விஜய் எடுத்து வருவது மக்களின் வரவேற்றை பெற்று வருகிறது.
ஜெ., பாணியில் விஜய்
இந்த நிலையில் விஜய், தனது வீட்டை காலி செய்து புதிய வீட்டில் குடியேற திட்டமிட்டுள்ளார். அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் இந்த முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னையின் நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் தமிழக முதலமைச்சர் விஜய், தினமும் சட்டப்பேரவைக்கு செல்லும் போது 20 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலமைச்சரின் கான்வாய் செல்லும் நேரங்களில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
போயஸ் கார்டனில் குடியேறும் விஜய்?
இந்த சூழலில், விஜய் விரைவில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள புதிய இல்லத்திற்கு குடியேற திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் போயஸ் கார்டன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் அதிகார மையமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதே பகுதியில் விஜய் குடியேற உள்ளதாக பரவும் தகவல்கள், அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால், விஜய்யின் இந்த முடிவு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.



