கோவை: கோவை விமான நிலையத்தில் ஜூன் 15 அன்று, Yatri Suvidha Diwas நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விமான போக்குவரத்து ஆணையத்தின் சார்பில், விமான பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் ஜூன் 15ஆம் தேதி அன்று, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் yatri suvidha diwas நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இலவச வைபை வசதி, Udan Yatri Cafe திட்டத்தில் குறைந்த விலையில் சிற்றுண்டிகள், டிஜி யாத்ரா திட்டத்தின் மூலம் எளிதாக பயணம் மேற்கொள்வது, சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி, லைப்ரரி வசதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளால் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வருகை எண்ணிக்கை இந்த ஆண்டு 3.4மில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேபோல் சரக்கு போக்குவரத்தும் இந்த ஆண்டு 15,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கப்பட்ட பின்னர் இந்த அளவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக அளவில் விமானங்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கான நவீன வசதிகளும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி, விமான பயணிகளுக்கு சிறந்த பயண சேவை வழங்கும் வகையில் Yatri Suvidha Diwas நிகழ்ச்களாக, கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, ரத்த தான முகாம், மரம் நடுதல், விமான போக்குவரத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஆலோசனை, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, வந்தேமாதரம் பாடல் இசைத்தல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இவை அனைத்தும் விமான பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
மேலும், விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேசியவர் ரூ.2200 கோடி மதிப்பீட்டில் கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக மாநில அரசு சார்பில் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஆயோக் மற்றும் பிற அமைப்புகளின் ஒப்புதல்கள் கிடைத்த பின்னர், டெண்டர் கோரப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும் என குறிப்பிட்டார்.


