கோவை: கோவையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில், சார்பதிவாளர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 5ஆம் தேதி, கோவை தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பத்திரப் பதிவு மற்றும் வில்லங்கச் சான்றிதழ் வழங்கும் பணிகளுக்காக பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர்களிடம் இருந்து சார்பதிவாளர் ஆனந்தகுமார் லஞ்சம் பெற்றதாக கண்டறியப்பட்டது.
Also Read: கோவையில் எம்.எல்.ஏ வை சூழ்ந்த மக்கள்…
மேலும், அவரது உதவியாளரான முகுந்தன், பத்திர எழுத்தர்களிடமிருந்து பணத்தை வசூலித்து சார்பதிவாளரிடம் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், முகுந்தனின் அறையிலிருந்து ரூ.38,420 ரொக்கப் பணமும், லஞ்சத் தொகைகள் குறித்த குறிப்புகள் அடங்கிய துண்டுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனுடன், ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.8,170, பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதிகாவிடம் இருந்து ரூ.56,800, ஆவண எழுத்தர் அமர்சிங்கிடம் இருந்து ரூ.9,500 என மொத்தம் ரூ.1,12,890 பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சார்பதிவாளர் ஆனந்தகுமார், உதவியாளர் முகுந்தன், ராஜேந்திரன், ராதிகா மற்றும் அமர்சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நாளில், காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் (பொறுப்பு) செல்வக்குமார் அமர்ந்திருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டபோதும், அங்கிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
Also Read:பருவமழை முன்னெச்சரிக்கை- கோவையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் தொடக்கம்…
ஆனால் பதிவறையில் பணியாற்றி வந்த ராஜகோபாலனிடம் இருந்து ரூ.2,700, அலுவலக உதவியாளர் சிபின் வைத்திருந்த பீரோவில் இருந்து ரூ.43,200 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், லஞ்சம் வழங்க வந்ததாகக் கூறப்படும் அருண்குமார் என்பவரிடம் இருந்து ரூ.10,500 மற்றும் ஆவணத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த சந்திரசேகரிடம் இருந்து ரூ.65,000 பறிமுதல் செய்யப்பட்டது.
காந்திபுரம் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் ரூ.1,21,400 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் (பொறுப்பு) செல்வக்குமார், சிபின், ராஜகோபாலன், சந்திரசேகர் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


