கோவை: தொகுதி வரையறை மசோதாவை எதிர்த்து கோவையில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொகுதி வரையறை (Delimitation) மசோதாவை எதிர்த்து கோவையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக தலைமையின் அழைப்பின் பேரில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கோவை மாநகரிலும் பல இடங்களில் கருப்பு கொடி கட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் இல்லத்தில் கருப்பு கொடி கட்டப்பட்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், சாயிபாபா காலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக் தலைமையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தொகுதி வரையறை நடைமுறைப்படுத்தப்பட்டால் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்றும், கூட்டாட்சி அமைப்பு பலவீனப்படுத்தப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
மேலும், மாநிலங்களின் குரல் குறைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


