கோவை :கோவை மாநகர நுண்ணறிவு பிரிவில் அனுபவமிக்க போலீசார் மாற்றப்பட்டதை தொடர்ந்து, நகரின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை செயல்பாடு குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும், மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மத்திய சிறை, நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் நுண்ணறிவு பிரிவு போலீசார் தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read:ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video
இப்பிரிவில் தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்ட முக்கிய அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அதிகாரிகளில் பலர் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், கோவை மாநகரம் மத ரீதியான பதற்றங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நகரமாக இருப்பதால், நுண்ணறிவு பிரிவின் அனுபவமும் தொடர்ச்சியான பணியும் மிகவும் முக்கியமானவை என்றார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, உளவுத்துறை செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாகவும், தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்படுவது உளவுத்துறை பணிகளில் இடையூறு ஏற்படுத்தும் என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Also Read: கோவையில் ஆபத்தான நிலை… இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை திடீர் உயர்வு
நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நீண்டகால அனுபவமும், உள்ளூர் சூழலைப் பற்றிய புரிதலும் அவசியம். பொதுவான காவல் நிலையங்களில் அதிகாரிகளை மாற்றுவது போல அடிக்கடி நுண்ணறிவு பிரிவிலும் மாற்றம் செய்வது பாதுகாப்பு சார்ந்த பணிகளில் சவால்களை உருவாக்கக்கூடும் என்றார்.
ஆட்சி மாற்றம் போன்ற சூழல்களில் நிர்வாக ரீதியான அதிகாரிகள் மாற்றம் நடைபெறுவது வழக்கமானதாக இருந்தாலும், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளின் திறமை, அனுபவம் மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


