கோவை: கோவையில் நடைபெற்று வரும் பட்டுப்புடவை கண்காட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவை பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தங்களது பாட்டிகளின் பட்டுப்புடவைகளை மார்டன் உடைகளாக மாற்றி வருவதாக பெண்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் பிரேமம் கல்யாண வைபோகம் என்ற பெயரில் திருமணத்திற்கான பட்டுப்புடவை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திருமண சீசனை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய நெசவு சேலைகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் பந்தினி, பைதானி, பனாரஸ், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு வகை பட்டுப்புடவைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இக்கண்காட்சியில் இடம்பெற்ற ரூ.4.5 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவை பெண்களின் கவனத்தை ஈர்த்தது.
தங்க மற்றும் வெள்ளி ஜரிகை கொண்டு, இளைஞர்களைக் கவரும் விதமாக எடை குறைவாக சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, பிரேமம் சில்க்ஸ் ஸ்வர்ணமுகி தெரிவித்தார்.
மிசஸ் இந்தியா எர்த் கிளாசிக் போட்டியின் வெற்றியாளரும், உடற்கட்டமைப்பு நிபுணருமான ஜெயாமகேஷ் இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெள்ளி, தங்க ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய புடவையை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயாமகேஷ் கூறுகையில்,
“பட்டுப்புடவைக்கு என்றுமே பெண்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பட்டுப்புடவை மீது ஆசை கொண்ட இந்த காலத்து பெண்கள் தங்கள் பாட்டிகளின் பட்டுப் புடவைகளை மார்டன் உடைகளாக மாற்றி அணிந்து பெருமையடைந்து வருகின்றனர்.” என்றார்.


