கோவை: கோவையில் கல்லூரி மாணவரை தாக்கி 2 பவுன் தங்கச் செயினை பறித்ததுடன், அறையில் அடைத்து வைத்து ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த கேசவன் (19), கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குனியமுத்தூர் இ.பி. காலனியில் நண்பருடன் வாடகை அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு அறைக்கு திரும்பிய கேசவன், தனது அறைக்குள் 5 பேர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர்களுக்கும் கேசவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல், கேசவனை இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினையும் பறித்ததாக தெரிகிறது. மேலும் அவரை அறைக்குள் அடைத்து வைத்து, ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே வெளியே விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் தங்கியிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த 5 பேர் கும்பல், கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே இருந்த சிமெண்ட் சீட் கூரையின் மீது குதித்து, அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
Also Read: கல்லூரி வாழ்க்கை வீணாகிவிட்டது: கோவை மாணவர்கள் வேதனை!
இந்த சம்பவம் குறித்து கேசவன் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆகாஷ், பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


