கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், ஐ.பி.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எளிமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த QR குறியீடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவல் ஆணையர் கண்ணன் பேசுகையில், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்த சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவமனையின் முயற்சியை பாராட்டினார்.
டாக்டர் குகன் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பணிகளில் மருத்துவமனை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டு புதிய முயற்சியாக “ஸ்பின் வீல்” QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புகையிலை பயன்பாடு வாய்ப்புற்றுநோய், தொண்டைப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இலவச ஓரல் கேன்சர் பரிசோதனை முகாமும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



