கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவர் டாஸ்மாக் பாரில் மது அருந்தியபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகராஜனுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அடிக்கடி தலைச்சுற்றல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
Also Read: கோவையில் தொடரும் மின்தடை; பொதுமக்கள் கடும் அவதி!
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்ற நாகராஜன், அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார், நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


