கோவை: கோவையில் சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் வாழும் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் ஆதரவற்ற நிலையில் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பு உள்ளம் அறக்கட்டளை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
அறக்கட்டளையின் தலைவர் கோவை இல்முதீன் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றோர் உணவு, உடை மற்றும் தங்குமிடம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில், மழை மற்றும் குளிர் போன்ற காலநிலை மாற்றங்களால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், சாலையோரங்களில் தங்குவதால் விபத்து அபாயம் மற்றும் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆதரவற்றோரில் பலருக்கு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் அவசர தேவையாக இருப்பதாகவும், அவர்களை மீட்டு பராமரிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு காப்பகங்கள் அல்லது மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் கைவிடப்பட்டு வாழும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


