நடிகர் சூரியின் அடுத்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று, (2026, ஏப்ரல் 25) நிறைவடைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகராக வலம் வருகிறார் சூரி. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் “விடுதலை” மற்றும் “கருடன்” படங்களில் இவரின் நடிப்பு பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத்தொடர்ந்து சூரி நடிக்கும் அடுத்த படம் “மண்டாடி”.
மண்டாடி என்றால் வலிமை மற்றும் பாரம்பரியத்தைக் குறிக்கும் சொல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் இருமொழி படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம்
இந்த படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான “செல்ஃபி” திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இப்படத்தை “ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்”(RS Infotainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
தரமான நல்ல கதைகளை தயாரிப்பதில் வல்லமை படைத்த இந்த நிறுவனம் தான் ஏற்கனவே சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தையும் தயாரித்தது.
கதைக்களம்
இந்த படம் ஒரு விளையாட்டு ஆக்ஷன் பட (Sports Action Drama) வகையைச் சேர்ந்தது. தென் தமிழகத்தின் கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரி ஒரு கடலோர மீனவ கிராமத்தில் இருக்கும் விளையாட்டு வீரராக நடித்துள்ளார்.

மீனவ கிராமங்களில் இருந்து வரும் இளைஞர்களின் விளையாட்டிற்கு பின்னால் இருக்கும் அரசியல், வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு உணர்ச்சிகரமான கதையாக உருவாகியுள்ளது.
சூரியின் அசூர வளர்ச்சி
முதலில் நகைச்சுவை நடிகராக “பரோட்டா சூரி” என்று தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஒரு கதாநாயகனாக அறிமுகமானார்.
தனது திறமையாலும் கடின உழைப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்று தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய கதாநாயகனாக தன்னை வளர்த்துக் கொண்டார். இந்த படத்தில் இவர் அதிகளவு தாடி மீசையுடன் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஒரு இளைஞனாகவும் விளையாட்டு வீரராகவும் நடிப்பதற்கு இவர் நிறைய கடுமையான உடற்பயிற்சிகளை செய்துள்ளார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். “விடுதலை” மற்றும் “கருடன்” போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு இந்த படம் இவரை திரையுலக வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள்
இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மிக சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படம் ஒரு இருமொழி படம் என்பதால் தமிழ் மொழியில் சூரி கதாநாயகனாகவும் நடிகர் சுயாஸ் கதையின் வில்லனாகவும் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு மொழியில் சுயாஸ் கதாநாயகனாகவும் சூரி கதையின் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் இந்த படத்திற்கு மேலும் உயிரூட்டும் என்பதில் சந்தேகமில்லை. விறுவிறுப்பான கதைக்களத்தில் இவரின் பாடல்கள் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவு
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026, ஏப்ரல் 25 அன்று நிறைவுப்பெற்றது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக் குழுவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரிடத்திலும் அதிக வரவேற்பை பெரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.


