கோவை: பா.ஜ.க-வில் இருந்து சிலர் வெளியேறுவதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை; அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிப் பயணத்தை முன்னிறுத்தியும், சர்வதேச யோகா தின விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் திருப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறினார். வறுமை ஒழிப்பு, வீடுகள், கழிப்பறைகள், ரயில்வே, விமான நிலையங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் விரைவில் முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வராததற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்றும் கூறினார்.
தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க ஒரு சித்தாந்த அடிப்படையிலான கட்சி என்பதால் தனிநபர்கள் வெளியேறுவதால் கட்சி பாதிக்கப்படாது என்றார். வெளியேறியவர்கள் பிரதமர் மோடியின் தலைமையை நம்பி மீண்டும் கட்சிக்கு திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழக பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும் என்றும், நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.





Comments are closed.