கோவை: கோவில்பாளையம் அருகே பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்ட தனியார் பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தி 40 பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கி புறப்பட்ட அந்த தனியார் பேருந்தில், வழக்கம்போல் கோவில்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பேருந்து கோவில்பாளையம் சாலையை கடக்க முயன்ற அந்த நேரத்தில், ஓட்டுநர் பிரேக் மிதிக்க முயன்றபோது அது செயலிழந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
பேருந்துக்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.
அந்த இக்கட்டான விநாடிகளில் சற்றும் பதற்றம் அடையாத ஓட்டுநர், சாலையின் ஓரத்தில் இருந்த மண் திட்டு மற்றும் மேடான பகுதிகளை நோக்கி பேருந்தை திருப்பி வேகத்தைக் குறைக்க முயன்றார். பேருந்து கட்டுப்பாடின்றி வருவதைக் கண்ட உள்ளூர் பொதுமக்களும் சுதாரித்துக் கொண்டு உடனடியாக செயல்பட்டனர்.
சாலையின் இருபுறமும் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, பேருந்து ஓரளவுக்கு வேகம் குறைந்த தருணத்தில் கற்களை சக்கரங்களின் அடியில் வைத்து பேருந்தை நிறுத்த உதவினர்.
நொடிப் பொழுதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஆபத்தான சூழலிலும் அசாத்திய தற்காப்புத் திறனை வெளிப்படுத்தி சாதுரியமாக பேருந்தை நிறுத்திய அந்த ஓட்டுநருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்தனர்.



